Wednesday, May 23, 2007

தந்தை பெரியார் - வாழ்க்கை வரைபடம் - 2

தன்னலமற்ற சமூகத் தொண்டுகள்

ஈரோடு நகரில் பெயர் பெற்ற செல்வச் செழுமையுள்ள ஒரு வணிகராகத் திகழ்ந்த நிலையில் தன்னலம்அற்ற சமூகப் பணிகள் ஆற்றும் பொது வாழ்க்கையிலும் பெரியார் அடிவைத்தார்.

ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி: பிளேக் எனப்படும் கொடுமையான தொற்றுநோய் ஈரோட்டைத் தாக்கியது. அதனால் நூற்றுக்கணக்கான மக்கள் மடிந்தனர்; ஆயிரக் கணக்கானோர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட்டம் பிடித்தனர். ஆனால் மற்றப் பணக்கார வணிகர்களைப் போல, தமது சொந்த பிறந்த நகரைத் துறந்து வெளியேறவில்லை உயர்ந்த பண்பாளரான இந்தப் பெருமகன். பிளேக் நோய் தங்களைத் தொற்றிக் கொள்ளுமோ என்னும் அச்சத்தில் இறந்தவர்களைத் தொடாமலே அவர்களின் நெருங்கிய உற்றார் உறவினரே ஒதுங்கி விலகிவிட்ட பொழுதும், இவரோ தன் தோழர்களுடன் அந்தச் சடலங்களைத் தம் முதுகின்மீதே சுமந்து சென்றார் சுடுகாட்டுக்கு!

ஈரோடு கடைத் தெருவில் உள்ள மற்ற வணிகர் அனைவரிடமும் எல்லையற்ற செல்வாக்கை இவர் பெற்றிருந்தார். வணிகர்களுக்கு இடையே வெடிக்கும் சண்டைகளை நடுநிலையோடும் நீதியுணர்வோடும் இவர் தீர்த்து வைத்தார்.


தமிழ்ப் புலவர்களுடன் நட்புறவு


1905-06

பவுத்த நெறி மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளால், பார்ப்பனரின் இந்து மதத்தையும் சாதி முறையையும் கடுமையாகக் கண்டித்தார் ஆதிதிராவிடரான பண்டிதமணி அயோத்திதாசர் என்னும் தமிழ் அறிஞர். இவரது (பெரியாரின்) இளமைக் காலத்தில் அவர் இவரைக் கவர்ந்தார்.

கரூர் நகரில் புலவர் மருதையா பிள்ளை என்னும் தமிழறிஞர் வாழ்ந்தார். பார்ப்பனர் பரப்பிவந்த இந்து மதம், சாதி முறை, இதிகாசங்களின் கற்பனைப் புரட்டுக் கதைகள், வேத சாத்திரங்கள் ஆகியவற்றின் மீது அவர் தொடுத்த கடுமையான கண்டனக் கணைகளும், அறிவுக் கூர்மையான வாதங்களும் கரூர், ஈரோடு போன்ற நகரங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த மிக எளிய நாட்டுப்புற மக்களையும் கூட கவர்ந்தன; அவரது நெஞ்சார்ந்த நட்புறவு பெரியாரின் உள்ளத்தில் நாத்திகம் என்னும் கடவுள் மறுப்புக் கோட்பாட்டை விதைப்பதிலும், ஊடுருவும் நுண்ணறிவுப் பகுத்தறிவுச் சிந்தனையாளராக இவரை உருவாக்குவதிலும் தலையாய பங்களிப்பைத் தந்தன.

மற்றொரு தமிழறிஞரான துறவி கைவல்யம் அடிகளாரின் உள்ளார்ந்த நட்புறவும் பெரியாரின் பகுத்தறிவுப் பார்வைக்குச் செழுமை சேர்த்தது. பொறியாளர் பா.வே. மாணிக்க நாயக்கர் போன்ற கல்வியாளர்களும் மிக உயர்ந்த அரசு அதிகாரிகளும், இவருடைய முற்போக்குக் கருத்துகளால் கவரப்பெற்று இந்த ஈரோடு வழிகாட்டிப் பெருவிளக்குடன் நட்புறவு கொண்டனர்

1909

ஒன்பது வயதிலேயே குழந்தைத் திருமணம் செய்யப்பட்டுக் கணவனை இழந்த கைம்பெண் ஆகிவிட்டார் இவர்தம் தங்கையின் மகள். தம் குடும்ப உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்குப் பணிந்துவிடாமல், அவரது மறுமணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டார் இவர்.


இந்திய விடுதலை இயக்கத்திற்காகத் தியாகங்கள்

1918

பெரியார் ஈரோடு நகராட்சியின் தலைவர் ஆனார். இந்து மதத்தின் மீதும் சாதிமுறை மீதும் குறிப்பாக, திராவிட இனத்தை அடக்கி ஒடுக்குவதற்காகப் பார்ப்பனர் திணித்த கொடிய தீண்டாமை மீதும் இவர் அழுத்தமான வெறுப்புக் கொண்டபோதிலும், இவருடைய தடம்புரளாத நேர்மையும் தலைசிறந்த நிருவாகத் திறனும் பல்வேறு பொதுத் துறை அமைப்புகளில் எண்ணற்ற பதவிகளைப் பரிசுகளாக ஈட்டித் தந்தன இவருக்கு.

ஆங்கிலேயர் ஆட்சி, சிறப்பு அறமன்ற நடுவராக (கவுரவ மாஜிஸ்டிரேட்) இவரை அமர்த்தியது.

மாவட்டக் கழகம், வட்டக் கழகம், நகர வங்கி, மதத் தேவ°தான அறக்கட்டளை, பொது நூலகம், போருக்கு ஆள் தேர்வுக்குழு, வேளாண்மையாளர் சங்கம், வணிகர் சங்கம், மகாஜன பள்ளி நிருவாகக்குழு - இப்படிப் பல அரசுத்துறை - மற்றும் தனியார் துறை அமைப்புகளில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் - என்றெல்லாம் 29 சிறப்பு நிலைப் பதவிகளை இவர் ஏற்றிருந்தார்.

எண்ணற்ற இன்றியமையாத நல்வாழ்வுத் திட்டங்கள் இவரால் செம்மையாக நடைமுறைப் படுத்தப்பட்டன. குறிப்பாக, குடிநீர்த் திட்டம் திறமையாகச் செயல்முறைக்கு வந்தது. பெரியார் ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்த பொழுது, பின்னாளில் இந்தியாவின்‘கவர்னர் ஜெனரல்’ ஆன திரு. சி. இராசகோபால ஆச்சாரி யாருக்கும் (இராஜாஜி) இவருக்கும் இடையே நட்புறவு மலர்ந்தது.

1919

திரு. பி. வரதராசுலு நாயுடு, திரு. சி. இராசகோபால ஆச்சாரியார் ஆகியோர், ‘மகாத்மா’ காந்தி வழி நடத்தும் தேசிய காங்கிரசுக் கட்சியில் சேருமாறு இவரை விரும்பி வேண்டிக்கொண்டனர். ஈரோடு நகராட்சித் தலைவர் பதவியை விலக்கி விட்டுக் காங்கிரசுக் கட்சியில் உறுப்பினராகப் பெரியார் தம்மை இணைத்துக் கொண்டார்.

1920

ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து ‘மகாத்மா’ காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் மிக்க ஆர்வத்துடன் இவர் ஈடுபட்டார். அந்தத் தலைவரின் எழுச்சி அழைப்பை ஏற்று, தாம் மேற்கொண்டிருந்த 29 பொதுத்துறைப் பதவிகள் அனைத்தையும் துறந்தார்.

ஒரு பவுன் விலை உருபா 10 (பத்து) கூட விற்காத அந்தக் காலத்தில் ஆண்டுதோறும் உருபா 20,000 ஈட்டி வந்த தொழில் நிறுவனத்தையே மூடிவிட்டார்; குடும்ப வணிகத்தையே துறந்தார். ஈரோட்டில் பிறப்பிக்கப்பட்ட 144 சட்டப் பிரிவு தடைச் சட்டத்தை மீறி முதன் முதலாக இவர் கைது ஆனார். மகாத்மா காந்தியடிகளைப் பெரியார் நம்பினார்; தம் தலைவராக ஏற்றுக் கொண்டார். எனவே அவர்தம் உண்மைத் தொண்டராகக் காந்தியடிகளின் ஒவ்வொரு சொல்லுக்கும் செயல் வடிவம் தர இவர் தொடங்கினார்.

அதற்கு ஓர் எடுத்துக்காட்டு: கதர் நூலைச் சக்கரத்தின் மூலம் இவர் நூற்றார். கதர்த் துணியையே அணிய வேண்டும் என்று காந்தியடிகள் கட்டளை விடுத்த உடனேயே விலை உயர்ந்த வெளிநாட்டுத் துணிகளை வீசி எறிந்துவிட்டு, கதர் ஆடையையே அணிய முற்பட்டார்.

அத்துடன், 80 வயதுள்ள தம் அன்னையார் உள்ளிட்ட தங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரையுமே கதர் ஆடை மட்டுமே உடுத்தக் கட்டாயப்படுத்தினார்! அதுவரை துய்த்த ஆடம்பரத்தைத் துறந்து, தமது வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு நிலையிலுமே எளிமைப் பண்பைக் கண்டிப்பான இயல்போடு கடைப்பிடித்தார்.


மதுவிலக்குக் கொள்கையை நிலைநாட்டியவர்

1921

மதுவிலக்குக் கொள்கை முதன் முதலில் உருவாக்கப் பெற்றது பெரியார் அவர்களின் இல்லத்திலேயே. காந்தியார் ஈரோடு வந்து இவரது இல்லத்தில் தங்கினார். அப்பொழுது, குடிபோதைக் கணவர்களால் மிகக்கொடிய துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மனைவியரின் தாங்கொணாத மனவலியைப் பற்றிப் பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாளும் அவரிடம் விளக்கிக் கூறினர்; மதுப் பொருள்களைத் தடை செய்யும் கொள்கையை வகுத்தே தீர வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தினர். இதற்காக ஒரு போராட்டத்தையே நடத்த வேண்டும் என்றும் வாதிட்டனர்.
போற்றத்தக்க இந்தக் கருத்தினை காந்தியார் உடனே ஏற்றுக் கொண்டார்.
மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு ஆங்கிலேயர் அரசை வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரசுக் கட்சியினர் கள்ளுக்கடை முன்னால் மறியல் செய்ய வேண்டும் என்று அறிவித்தார்.

மதுவிலக்குக் கொள்கையை நிலைநாட்ட காந்தியார் விடுத்த அந்தக் கட்டளையை நிறைவேற்று வதற்காக, தம்முடைய பரந்த தோப்புகளில் கள் உற்பத்திக்காக நின்ற 500-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களைப் பெரியார் வேரோடு வெட்டி வீழ்த்தினார்.

அந்த அளவுக்கு மதுவிலக்குக் கொள்கையிலும் உறுதியான பிடிப்புக் கொண்டிருந்தார் இவர். ஈரோடு நகரில் போராட்ட வீரர்களை வழிநடத்திச் சென்று கள்ளுக்கடை முன்னால் மறியல் புரிந்தார் பெரியார். இவர் கைது செய்யப்பட்டு, ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.


1922

இவர்தம் மனைவி நாகம்மாளும் தங்கை கண்ணம்மாளும் கிளர்ச்சியில் மிகத் துணிச்சலோடு குதித்தனர்; கள்ளுக்கடை முன்னால் மறியல் செய்வதற்குப் பெண் தொண்டர்களைத் தாங்களே வழி நடத்திச் சென்றனர். அந்தப் போராட்டத்தை நிறுத்திவிடுமாறு, காங்கிரசுக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் சிலர் ‘மாமனிதர்’ காந்தியாரை வேண்டிக் கொண்டனர். அப்பொழுது அவரோ கிளர்ச்சியை நிறுத்தும் அத்தகைய முடிவைத் தம்மால் மட்டுமே எடுக்க முடியாது என்றும் ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்மணிகளின் கைகளில்தான் அது இருக்கிறது என்றும் அவர் உறுதிபடவே உரைத்தார். பெரியார் அவர்களின் மனைவியும் தங்கையுமே அவர் குறிப்பாய் உணர்த்திய இரு பெண்மணிகள்.


தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்

1922

பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் தலைவர் ஆனார். திருப்பூரில் நடைபெற்ற அந்தக் கட்சியின் மாநில மாநாட்டில், திராவிட இனத்தைச் சேர்ந்த ஆதி திராவிடர் அனைவரும் வழிபாடு செய்ய கோவில்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். ஆனால் காங்கிரஸ் குழுவில் இருந்த பார்ப்பனர்கள் அந்தத் தீர்மானம் நிறைவேறாதபடி தடுத்துவிட்டனர்.

தங்களது ‘வருண தருமம்’ என்னும் சாதி முறையைக் கடைப்பிடிப்பதில் அவர்கள் காட்டிய வெறித்தனத்தால் மிகுந்த ஆத்திரம் அடைந்த பெரியார் - ஆரியரின் மனுசுமிருதி, இராமாயணம் முதலானவற்றை கொளுத்த வேண்டும் என்று அறிவித்தார். ஏனெனில், சாதி மற்றும் மூடநம்பிக்கை என்னும் கொடுமைகளால் திராவிட இனத்தையே அடக்கி ஒடுக்கி இழிவுபடுத்துவதற்குத் தங்கள் மதக் கருவிகளாக அவற்றை வஞ்சகமான பார்ப்பனர் பயன்படுத்தினர்.

1923

இந்து மதக் கோவில்களில் பார்ப்பனர் நடத்திய சுரண்டல் வேட்டைக்கு முடிவு கட்ட - பனகல் அரசர் தலைமையில் அமைந்த நீதிக் கட்சி அரசு, சென்னை மாகாண சட்ட மேலவையில், ஒரு சட்டத்தை நிறைவேற்றி இந்து சமய அறநிலையத் துறை அமைக்க வழி வகுத்தது.

தாம் ஒரு காங்கிரஸ் தலைவராக இருந்த போதிலும் கூட நீதிக் கட்சி ஆட்சி நிறைவேற்றிய அந்தச் சட்டத்தைப் பெரியார் ஆதரித்தார். இந்துமத ஆரியர்களால் ஒடுக்கி உருக்குலைக்கப்பட்ட திராவிட இனத்தவருக்குச் சமூக நீதியும், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளியல் போன்றவற்றில் சம உரிமைகளும் அடைய வேண்டும் என்பதில் உண்மையான அக்கறை கொண்டிருந்ததே பெரியார் அப்படி ஆதரித்ததற்குக் காரணம்.


சமூக நீதிக்கான போர் மறவர்

1924

அரசு ஆணை மூலம் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வகுப்புவாரி இட ஒதுக்கீடு கொள்கையைச் செயற்படுத்த நீதிக் கட்சி ஆட்சி மேற்கொள்ளும் நட வடிக்கைகளைப் பெரியார் பாராட்டினார்.

இந்து சாதியார்களில் மிகவும் கீழான அடிமைகளாக ஆதி திராவிடரை அடக்கி ஒடுக்குவதற்கு ஒரு வழிமுறையாகத் ‘தீண்டாமை’ என்பதைப் பார்ப்பனர் கடுமையாகக் கடைப்பிடித்தனர்.

அந்தக் கொடிய சாதி முறையை ஒழித்துக் கட்டும் பொருட்டு, கேரளா மாநிலம் வைக்கம் என்னும் ஊரில் தடைச் சட்டத்தையும் மீறி நெஞ்சுரத்தோடு போராட்டத்துக்குப் பெரியார் தலைமை ஏற்று நடத்தினார்.
வைக்கம் என்னும் அந்த நகரில், கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஈழவர் என்னும் தாழ்த்தப்பட்ட மக்கள் நடப்பதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை. எனவேதான் அங்கே உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டத்தைத் தொடங்கினர். அதற்குத் தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்பதற்குத் தமிழ்நாட்டிலிருந்து வருமாறு பெரியாருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இவரும் அங்கே அந்தக் கிளர்ச்சிக்குத் தலைமை ஏற்றார். அதனால் இரண்டு தடவைகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.

அந்த மறியல் போர் ஓர் ஆண்டுக்குமேல் நீடித்தது. பின்னர் தீண்டப்படாதவர்க்குத் தெருக்கள் திறந்துவிடப்பட்டன; நடப்பதற்கு அனுமதி கிடைத்தது. மனித உரிமைகளுக்காகத் துணிச்சலோடு நடைபெற்ற போராட்டமும், தியாகமும் வெற்றியை ஈட்டித் தந்தன. அதனால் ‘வைக்கம் வீரர்’ என்று பெரியார் அழைக்கப்பட்டார்..

1924 செப்டம்பர் 11

ஆங்கிலேயர் ஆட்சியில் அயல்நாட்டுப் பொருள்களின் புறக்கணிப்புக்கும், கதர்த் துணியையே உடுத்த வேண்டும் என்பதற்கும் முன்பு கொள்கை முழக்கம் (பிரச்சாரம்) செய்தார் என்பதற்காக இவர் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.

1924

திருநெல்வேலி அருகே சேரன்மாதேவி ஊரில் நடைபெற்ற தேசிய பயிற்சிப் பள்ளியின் விடுதி ‘குருகுலம்’ என அழைக்கப்பெற்றது. வ.வே.சு. அய்யர் என்னும் பார்ப்பனர் அதன் பொறுப்பினை ஏற்றிருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் குழு ஏற்படுத்திய அந்தக் குருகுலம், திராவிட இனத்தைச் சேர்ந்த கொடையாளிகளின் நிதி உதவியாலும் இயங்கியது.

ஆயினும்அதன் பொறுப்பினை ஏற்றிருந்தவரோ அங்கே சாதி வேறுபாட்டைக்
காட்டினார். பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்று தனித்தனியே பிரித்து வைத்து உணவு பரிமாறப்பட்டது. திராவிட மாணவர்களைத் தனியே ஒதுக்கி வைத்துத் தமது ஆரிய இனப் பார்ப்பன மாணவர்களுக்கு மட்டும் தனிச் சலுகை காட்டிய வ.வே.சு. அய்யரின் சாதி வெறித்தனம் மிகுந்த அணுகு முறை பெரியாரிடம் ஆத்திரத்தையே மூட்டியது. ஆகவே மாபெரும் மனிதப் பண்பாளரான இவர், அந்தப் பார்ப்பனரின் கொடிய போக்கைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் செயலாளரான பெரியார் போர்கொடி தூக்கினார்.

1924 நவம்பர் திங்களில் திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாகாண மாநாட்டுக்கு இவர் தலைமை தாங்கினார்.
ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பனர்க்கு இணையாக வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் உயர்ந்த நிலைகளை எட்டவும், இழிந்த நிலைகளைத் துரத்தி அடிக்கவும் பார்ப்பனர் அல்லாதார் எனப்படும் திராவிடர் இனத்தவர்க்குக் கல்வியிலும் அரசு அலுவல்களிலும் வகுப்புவாரி இட ஒதுக்கீடு கட்டாயம் வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் தீர்மானத்தை 1920 ஆம் ஆண்டு முதலே காங்கிரஸ் மாநாடுகளில் முன்மொழிந்து கொண்டே இருந்தார் பெரியார்.
தாம் தலைமை ஏற்ற 1924 திருவண்ணாமலை காங்கிரஸ் மாகாண மாநாட்டிலும் அந்தத் தீர்மானத்தை இவர் கொண்டு வந்தார்.

ஆனால், பார்ப்பனர்களோ, திருநெல்வேலி (1920), தஞ்சாவூர் (1921), திருப்பூர் (1922), சேலம் (1923) ஆகிய காங்கிரஸ் மாநாடுகளில் செய்ததைப் போன்றே திருவண்ணாமலை (1924) மாநாட்டிலும் பெரியாரின் தீர்மானத்தைத் தோற்கடித்தனர்.

1924

சேலம் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் பொழுது பெரியார் ஓர் எச்சரிக்கை விடுத்தார்:

“ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே பார்ப்பனர் அல்லாதார் (திராவிடர்) வகுப்புவாரி இடஒதுக்கீடு உரிமையைப் பெற்றால் ஒழிய பார்ப்பனர் மேலாதிக்கத்தை ஒழிக்கவே முடியாது; திராவிட இனத்தவர், ‘பிராமணோக்கிரசி’ என்னும் பார்ப்பனீயக் கொடுங்கோல் ஆட்சியில் துன்பப்படத்தான் வேண்டும்” என்றார். இவ்வாறு ஒரு புதிய சொல்லாக்கத்தையே இவர் உருவாக்கினார்.

1925 - மே 2

‘குடி அரசு’ என்னும் தலைப்பில் ஒரு தமிழ் வார இதழைப் பெரியார் வெளியிட்டார். தாமே அதன் ஆசிரியராகவும் அமர்ந்தார். இந்து மதத்தின் கொடிய சாதி முறை மற்றும் மூடநம்பிக்கை மூலம் பார்ப்பனரால் அடக்கி அடிமைப்படுத்தப்பட்ட திராவிட இனத்தவருக்கு விழிப்புணர்ச்சி ஊட்டும் தன்மான எழுச்சிக் கொள்கைகளை அந்த இதழ் வாயிலாகப் பரப்பினார்.

துறவுக்கோலம் பூண்ட தமிழ் ஞானியும் கவர்ச்சி மிக்க சொற்பொழிவாளருமான, புகழ் பூத்த திருப்பாதிரிப்புலியூர் - ஞானியார் அடிகள் ‘குடி அரசு’ வார ஏட்டின் முதல் இதழை வெளியிட்டார்.


1925 - நவம்பர்

தமிழ் நூலாசிரியர், இதழ் ஆசிரியர், சொற்பொழிவாளர், தொழிலாளர் தலைவர் - என்றெல்லாம் பலதுறை அறிஞராகத் திகழ்ந்தவர் ‘தமிழ்த் தென்றல்’ திரு. வி. கலியாணசுந்தரனார் (திரு.வி.க.). அவரது தலைமையில் காஞ்சீபுரம் நகரில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அதிலும் கூட, பார்ப்பனர் அல்லாதாருக்கு நூற்றுக்கு 50 விழுக்காடு வகுப்புவாரி இட ஒதுக்கீடு வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார் பெரியார். வழக்கம்போலவே தந்திரம் மிக்க பார்ப்பனர், அது நிறைவேறுவதைத் தடுத்தனர். அந்தத் தோல்வி எல்லையற்ற ஆத்திரக்காரராக மாற்றியது பெரியாரை. எனவே, பார்ப்பனரால் முழுமையாகக் கைப்பற்றப்பட்டு ஆதிக்கம் செலுத்திய மாகாணத் தலைமைப் பொறுப்புக் குழுவைக் கொண்ட காங்கிரசுக் கட்சியிலிருந்து இவர் வெளியேறினார்.

அவ்வாறு காங்கிரசுக்கு விடை கொடுத்த பொழுது, தமது எதிர்காலத்தின் ஒரே வேலை - பார்ப்பனர் ஆதிக்க ஆட்சியைக் கொண்ட காங்கிரசை எல்லா வகைகளிலும் அடியோடு ஒழித்துக் கட்டுவதுதான் என்று பெரியார் இடி முழக்கத்துடன் சூளுரைத்தார். இவர் மாநாட்டை விட்டு வெளியேறிய உடனேயே, மிகப் பெரும் எண்ணிக்கையில் கட்சியின் முன்னணித் தலைவர்களும் தொண்டர்களும் இவரைப் பின்தொடர்ந்து வந்துவிட்டனர்.

(தொடரும்)

0 comments: